Thursday, 22 May 2014

முத்துக்குமார் பிறந்தமண் அடங்கிப்போகாது.


"வன்னி "
ஒருபோதும்
இவ்வளவு துயரை சுமந்ததில்லை
எல்லையில்லாத் துயர்.-இன்று
அடிமைகளின் ஆன்மா தவிக்கும்
சுடலைப் பூமி.  அம்மா---------



கொடுங்கோல் சிங்கள அரசு
எந்தக் குற்றத்தைச் செய்யவில்லை.

பச்சைவயலாய் தாலாட்டும்
பால் போன்ற வாழ்வு
மிச்சமில்லாமல் கருகி
செத்தவீடும் இல்லாமல்
மூச்சடங்கிப் போயிற்று.

சிங்கள அரசை நம்புவதும்
மண்குதிரையை நம்புவதும் வேறல்ல.
சிங்களம் தீர்வே தரப்போவதில்லை.
எங்களுக்கு சுதந்திரம் தேவையில்லை
சொல்ல அவர்கள் யார்?
பசிக்கிறவனுக்குதானே உணவு.
பசிக்கவில்லை!
அடுத்தவர் எப்படி சொல்ல முடியும்?

குறட்டை சத்தத்திற்கே
விவாகரத்து வழங்கும் உலகில்
என்றும் இணைய முடியா இனம்
தனித்து வாழ முடியாதா?

பிச்சைக்காரரைக் காணமுடியாமண்ணில்
எல்லோருமே பிச்சைக்காரரான சோகம்
நாளும் எம்மண் சோபை இழக்கிறது.
தீர்வு,பேச்சு,விசேட தூதுவர்
காலம்
திட்டமிட்டு திட்டமிட்டே இழுக்கப்படுகிறது.
என்ன மிஞ்சப்போகிறது?
போர் ஓய்ந்தபின்னும்
கைதுகளோ கடத்தல்களோ ஓயவில்லை.
பாலகரும் சிறையில் வாழும் நாடு.
புயல் எப்போதாவது வீசலாம்
புயலும் வெள்ளமும்தான் வாழ்வாகலாமா?

முள்ளிவாய்க்காலில்
அந்த அதிதுயர இறுதி நாட்களில்
மக்கள் இழப்பினைத் தவிர்க்க 
தலைவன்
சுற்றுக்காவல் சண்டையை
தவிர்க்க ஆணையிட்டான்.        
போராளிகள்,தளபதிகள்
மக்களற்ற சிறுதுண்டில் ஒன்றானார்கள்
சுயவிருப்பில்
போராளிகள்
முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்
பல போராளிகள்
குறிப்பாக திருமணமான போராளிகள்
இராணுவப் பகுதிக்குள் சென்றார்கள்.
"வெளிநாடு தலையிட்டு
தங்களை விடுவிக்கும்"
கதை ஒன்று இருந்தது.
சிங்களம்
வானொலியிலும்,ஒலிபெருக்கியிலும்
சரணடைந்தால் உடன்  விடுதலை ,
கருணாவைப் பாருங்கள்.
பிள்ளையானைப் பாருங்கள்.
சிங்களம் நம்பிக்கை தந்து
வழமைபோல கழுத்தறுத்தது.
பிரான்சிஸ் பாதிரியாருடன்
சரணடைந்தபல நூறு போராளிகளுடன்
ஈராயிரம் போராளிகளின் விபரங்கள் 
இன்னும் இருட்டறைக்குள்.

மக்கள் சென்றபின்
தளபதிகள் சண்டையிட்டு மடிந்தனர்.
காயமடைந்து சயனைட் அடித்தனர்.
வெடிகுண்டை வெடிக்க வைத்து சிதறினர்.
உடலில் வெடிமருந்தை கட்டி தூளாகினர்.
தங்களுக்கு தாங்களே சுட்டு வீழ்ந்தனர்.
இறப்பிற்கு சிலகணங்கள் முன்பும்
அதே பம்பல்.அதே கலகலப்பு.அதே மனிதம்.
சோதரர்களே இறுதி மரியாதை தரவில்லை.
எம் உயிர் நசிபடுகிறது.

சிங்களம்
எம் தமிழக தலைவர்களை
கோமாளிகள் என எள்ளி நகையாட
அவர்களோ
பொன்னாடை போர்த்திப் போகிறார்கள்.

மாவீரர் துயிலும் இல்லங்களை
சிதைத்து,அழித்து,கிண்டி
தம் இருப்பிடமாக்குகிறது (அ)சிங்களம்.
இவ்வளவு கேவலமாய்ப் போகிறது
அநாகரீக இனம்.
பிணத்தை சாப்பிடுகிறார்கள் ராஜபக்சக்கள்.
இரத்த வெடிலுடன் திரிகிறார்கள்
அவர் மனைவி பிள்ளைகள்.
நாயைக் கற்பழித்தானாம் சிங்களன் 
ஊடகங்களின் இன்றைய செய்தி -அவன்தான்
ராஜபக்சவின் உண்மை பிம்பம்.

அநாதரவானவனுக்கு
உதவத்தான் சர்வதேச உதவி நிறுவனங்கள்
அவற்றை உதவவிடாமல் தடுக்கிறதே சிங்களம்
உலகம் மௌனமாய் பார்க்கிறதே
என்ன என்ன கொடுமை.
களத்தில்
எம் வளங்களைக் கொள்ளையிட்டு
புலத்தில்
எம்வளங்களில் கண்வைக்கிறது சிங்களம்.
செழித்து வாழ்ந்த தமிழரை
செல்லாக்காசாக்க திட்டமிடும் அராஜபக்சக்கள்.

அருகில் வாழும் ஆறுகோடி உறவுகளே!
உங்களிடம்
அன்றாட சாப்பாட்டைக் கேட்கவில்லை.
கல்யாணம் நடத்தித்தரக் கேட்கவில்லை.
இருக்க வீட்டைக் கூட கேட்கவில்லை.
எம்பூர்வீக தாயகபூமியில்
எம்சுதந்திர வாழ்வைப் பெற்றுத்தாருங்கள்.
நாளும் பறிக்கப்படும் நிலத்தை மீட்டுத்தாருங்கள்.
அழியும் கலை கலாசாரத்தை காத்துத்தாருங்கள்.
வங்கக்கடலில் பறிபோகும் உயிர்களை காப்பாற்றுங்கள்.

சிங்கள இராணுவம் ஆக்கிரமித்த
சம்பூரில் அணுமின் நிலையம்.
ஆயிரத்திற்கு மேல் குடும்பங்கள்
நடுத்தெருவில் நிரந்தர அகதிகளாய் .
யாழில் இலட்ச்ச மக்கள்
இருபது வருடமாய் சொந்த நிலம் இழந்து
எத்தனை காலத்திற்கு அகதி வாழ்வு.
மணலாறில் தனிசிங்கள குடியேற்றம்
வெலி ஓயா என பெயர் மாற்றி
அனுராதபுரத்துடன் இணைப்பு.

வன்னியில்
பத்தாயிரம் ஏக்கர் நிலம்
குடியேற்றத்திட்கு அபகரிப்பு.
முருகண்டியில் ஐயாயிரம் ஏக்கரில்
பன்னீராயிரம் ராணுவக்குடும்பங்களுக்கு
வீடமைப்பு,
வைத்தியசாலை,பாடசாலையும்தான்.
ஒரு இனம் அழியப்போகிறது
ஆறு கோடித் தமிழர் அருகில் இருக்க
உறவு இனம் அழியப்போகிறது.

புலிகள் இருந்தபோதே
மூன்று ஏக்கரில்த்தான் இராணுவமுகாம் இருந்தது.
இப்போது முப்பது ஏக்கரில். ஏன்?

பாரதத்தின் பகைநாடு எதனுடனும்,
என்றும்
நட்பு பாராட்டவில்லை ஈழத்தமிழர்
சிங்களம் சீனா,பாகிஸ்தானுடன் கூடி குழவி
இந்தியுடன் இணைந்து அழித்தது எம்மை.  

எம்தாய் மண் வளங்களை வறுகி
மிகுதியை
ஒவ்வொரு நாடுகளாய்
ஒப்பந்தம் செய்து தாரைவார்க்கிறது
பூர்வீக மக்களின் ஒப்புதலற்று
நவீன உலகில் எல்லாம் சாத்தியமாகிறது.

யாழில் இருந்து இராமேஸ்வரம் மிக அருகில்
கொழும்போ தொலைவில்
ஆறுகோடித் தமிழர் அருகில் இருக்கிறார்கள்.

தமிழ்மொழி செம்மொழி ஆகையில்
தமிழரை செந்நீரில் குளிப்பாட்டிற்று சிங்களம்.
மாதத்திற்கு ஒருமுறை
சிங்களருக்கு பூரணை கொண்டாட்டம்
எங்களுக்கோ
வங்கக் கடலில் இருந்து ஒரு துயர் செய்தியாவது.

பெரிய இனத்தோடு சிறிய இனம் கலந்தால்
சிறிய  இனம் இல்லாது போய்விடும் .இது யதார்த்தம் .
நச்சு மகிந்தரின் நரித்திட்டமும் இதுதான்.

உலக போர்குற்ற விசாரணையை திசை திருப்ப
இந்தி சினிமாவை அழைக்கிறது சிங்களம்.

புலம்பெயர் தமிழர் பலத்தினை சிதைக்க
போர்குற்ற ராணுவதளபதிகளை தூதுவராக்கி
வியூகம் அமைக்கிறது சிங்களம்.

விடுதலைப் புலிகள்தான்
சமாதானத்தைக் குழப்புகிறார்கள்
சொன்னவர்கள்
இன்று அரசியல் தீர்வை தரலாம் தானே.
அரசியல் தீர்விற்கு யார் தடை
இன்றாவது
போராட்ட அவசியம் உலகிற்கு விளங்குமா?

தமிழரின் தேவை
அபிவிருத்தி அல்ல.
சுதந்திரம்.பாதுகாப்பு
எம்பூர்வீக மண்ணின் சுதந்திரம்.
சிங்கள, இராணுவமயமாக்கல் அல்ல.

அபிவிருத்தி என்று
அம்மணமாய் நிற்பவருக்கு
முடிசூட வருகிறார்கள்
கோடரிக்காம்புகள்
பச்சோந்திகள்.

கேட்பாரின்றி
தமிழரை அழித்தல்
தேசிய ஒருமைப்பாடாகிறது.

சிங்கள மக்கள் விரும்பா தீர்வை
நான் தரமாட்டன் -குற்றம்,
நீதியின்மைக்கான ஜனாதிபதி மகிந்த.
தமிழர் விரும்பும் தீர்வு
தமிழருக்கானது.
சிங்களவருக்கானது அல்ல .
சிங்களவருக்கான தீர்வை
தமிழர் தீர்மானிக்க முடியுமா?

பச்சை பசேலென்று நெற்கதிர் அசையுமே
சந்தை நிறைஞ்சு மரக்கறிகள் கிடக்குமே
காது நிறைய கோவில்மணி கேட்குமே
மனது நிறையும் மண்வாசமே
ஐயோ எங்கட நிலம்
மக்கள் கையேந்த
சிங்களம்
கிடப்பதை சுருட்ட கடை விரிக்கிறது.
இருளில் உயிர்பயம்தான்
ஆனாலும் பரவாயில்லை
பகலில
ஊரை,மக்களை பார்க்க முடியல.
வீடு,கடை,சந்தை,
வயல்,வளம்,கோவில்,
உறுதிகளுடன்,சான்றிதல்கள்,
கை கால்களுடன் உயிர்கள்
எல்லாமே இல்லாமல்
என்ன வாழ்வு
சித்தம் போனவனுக்கு சுகம்தான்.

வங்கிகள் வருகின்றன
வீட்டு உறுதியிருந்தால்
பணம் தருவதாய் சொல்கிறார்கள்.
வட்டியோடு கட்டும்போது தெரியும் சுமை.
பனையால வீழ்ந்தவனை
மாடு ஏறி,ஏறி உலக்குகிறது.

இங்கு
அநேகரிடம் ஒரு சந்தேகம் இருக்கிறது.
உண்மையாகவே
அருகில் ஆறுகோடித் தமிழர் இருக்கிறார்களா?

சிறிலங்காவிற்கான
உதவி வழங்கும் நாடுகளின்
தமிழர்களுக்கான உதவிகள்
தமிழரை அடைவதேயில்லை.

சிங்களம்
எம்மனிதாபிமான துயரை அரசியலாக்கி
பிரதிபலனில்
எம்மையே அழிக்கிறது.

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடந்தான்
பேச்சுவார்த்தை நடந்தது.
இருதரப்பாய் உலகம் ஏற்றது.
போரில் சரணடைந்தவரை
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி
விடுதலை செய்யவில்லை .
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூட
பார்க்க அனுமதி இல்லை .
மனித உரிமையை இழிவுபடுத்தும்
சிங்களத்தை
சர்வதேசம் ஏன் தனிமைப்படுத்தவில்லை?

சமவாழ்வு ,சுயாட்சி
தோல்வியடையவே
தனி அரசை தேடினர் தமிழர்.

இன்று
வன்னி ஊடக சங்க தலைவர் சிங்களவர்.
மக்கள் குப்பிவிளக்குடன்
தரப்பாளுக்குள்ளும் ,பற்றைகளுக்குள்ளும் வாழ
கிளியில் சிங்களம்
மின்குமிழ் வலைப்பின்னலில்
பாரிய வெசாக் கொண்டாட்டம்.
அடிமை தேசத்தில்
ஒருகோடி செலவழித்து அமைச்சரவை கூட்டமும் .

சுடலைகளில் கூட வாழலாம்
பேய்களை யாரும் பார்ப்பதில்லை.
இங்கோ அடிக்கு அடி,மூலைக்கு மூலை
இராணுவப்பேய்கள்.
சதா ஒவ்வொன்றுக்கும்
இராணுவப் பேய்களுடன் மல்லுக்கட்டவேண்டி இருக்கிறது.

அண்ணா
எளிமை குடிகொண்ட கோவில் நீ
மரக்கட்டிலில்
தலையனையற்று படுத்தெழும்பிய
ஆட்சித்தலைவன் நீ.
சகல அறங்களும் செய்த
கொடையாளி நீ.
உனக்கோ
அரை அடி நிலம் கூட
சொந்தமாய் இருந்ததில்லை.
குடும்பத்தை
ஒரு ஞானியைப்போல
முழுமையாய் விடுதலைக்கு உரமிட்டவன் நீ.
மக்கள் விடுதலையில் விடாக்கொண்டன்.
மாவீரர் தியாகங்களை சதா
மனதினில் பதிக்கும் மாவீரத் தந்தை நீ.
உன் இனம்
தன்னை இழந்து
விலை போகும் இனமாக
மாறிவிடுமோ
மனதினில் அச்சம் குடிகொள்கிறது.
அண்ணா எதுவுமே பிடிக்கவில்லை.

என்பத்தி மூன்றில் மணலாறு பறிபோயிற்று.
திருகோணமலையில்
தமிழ்க் குரல்கள் அடங்கிப்போகிறது.
அம்பாறையிலும்
அத்திவாரம் ஆடுகிறது.
வன்னிக்கு
என்ன நடக்கப்போகிறது.

முத்துக்குமார் பிறந்த மண்
அடங்கிப்போகாது
அணை உடைக்குமென
இன்னும் காத்திருக்கிறோம்.

-சுருதி-

0 comments:

Post a Comment

 

தமிழீழக் குறும்படங்கள்

வெல்லும்வரை …

தமிழீழ போராட்ட வரலாறு

தலைவர் அவர்களின் உரையிலிருந்து

தமிழீழ பாடல்கள்

சுட்டும் விரலால் சுட்டி